மீண்டும் இணையும் தனுஷ் - மாரிசெல்வராஜ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வம் இருந்து வருகிறது.
கொரோனா இரண்டாவது அலை காலகட்டத்தில் திரையரங்குகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. எனினும், கர்ணன் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனால் தொடர்ந்து கர்ணன் படம் நல்ல வசூலையே ஈட்டி வருகிறது. திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் விளையாட்டுத் துறை பிரபலங்களும் அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த படத்திற்கு தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Elated to announce that after the blockbuster success of Karnan, Mari Selvaraj and myself are joining hands once again. Pre production going on,
— Dhanush (@dhanushkraja) April 23, 2021
Shoot will commence next year.
இந்நிலையில் மாரி செல்வராஜுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தனுஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இவர்களுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கப்படும் என அந்த பதிவில் நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் தாயாராகி வரும் ‘தி கிரே மேன்’ படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் தங்கியுள்ளார். மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு தனுஷ் - மாரி செல்வராஜ் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர். முன்னதாக சூர்யா நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.