2024ல் பேரதிர்ச்சி தந்த திரைப் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள்..!
தனுஷ் – ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தனுஷ். அதைப்போல் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா திரைத்துறையில் ஒரு இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இணைந்து வாழ்ந்து வந்த தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், தங்களின் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இரண்டு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதும் இருவருமே ஆஜராகவில்லை. எனவே இருவரும் தங்களின் மகன்களுக்காக சமரசமாகிவிட்டனர் என்று செய்திகள் உலா வந்தது. ஆனால் கடந்த நவம்பர் 27ஆம் தேதி தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே தங்களுக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை என உறுதியாக இருந்த நிலையில் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி
திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். அதேபோல் சைந்தவி சினிமாவில் பாடகியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இவர்களின் திருமண வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் இவர்களுக்கு கடந்த 2020இல் அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்து வந்தனர். அதன்படி ஜி.வி. பிரகாஷ் இசையில் சைந்தவி பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவ்வாறு தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைத்துறையிலும் இணைந்து பயணித்த ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இருவரும் எதிர்பாராத விதமாக தங்களின் திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். இவர்களுடைய விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது.
ஜெயம் ரவி – ஆர்த்தி
தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ் மற்றும் அயான் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். 15 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட திடீரென ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை .ஒன்றினை வெளியிட்டு அறிவித்திருந்தார்
இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதை தொடர்ந்து தனது மனைவியும் மாமியாரும் தன்னை அடிமை போல் நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார் ஜெயம் ரவி. ஆனால் ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் இணைந்து வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார். சூழல் இப்படி இருக்க, இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனவே இந்த சமரச பேச்சுவார்த்தையின் இறுதியில் இருவரும் மகன்களுக்காக சேர்ந்து வாழ்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏ.ஆர். ரகுமான்- சாய்ரா பானு
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரகுமான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்தனை ரசிகர்களையும் தனது இசையினாலும் குரலாலும் உற்சாகப்படுத்திய ஏ.ஆர். ரகுமான் இந்த 2024 ஆம் ஆண்டில் யாராலும் மறக்க முடியாத பேரதிர்ச்சியையும் தந்துள்ளார்.ஆமாம், ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா பானுவின் விவாகரத்து செய்தி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. விவாகரத்து பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படாத இந்த ஜோடி தங்களின் திருமண வாழ்க்கையின் 30 வருடங்களை எட்டி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு மண்ணோடு மண்ணாக புதைந்தது போல் இவர்களின் இந்த விவாகரத்து முடிவு அனைவருக்கும் மன வருத்தத்தை தந்துள்ளது.
எனவே 2024 ஆம் ஆண்டு என்ற புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் அதில் ரசிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருந்தாலும் இந்த விவாகரத்து செய்திகள் மட்டும் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது.