பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்..!!

 
1

1993-ம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான ‘கோலங்கள்’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்றினார். அப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படத்துக்கும் வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

2009-ம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ படத்தை இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது தவிர ‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் ஆவார். அவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web