‘அயலான்’ படத்தின் முழு விமர்சனம்..!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/3814d7562bb272fd74c55812c408c19d.png)
இயக்குனர் ரவிக்குமார் இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான்.ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாஸ், பானுப்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சரத் கே ல்கர் வில்லனாக நடித்து இருக்கிறார்.
2030 – ல் பூமியில் எனர்ஜியின் தேவை பல மடங்கு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டு, பூமியின் மிக மிக ஆழத்தில் இருக்கும் ஒரு வாயுவை எடுக்க முதலீட்டாளர்களிடம் பிசினஸ் பேசுகிறான் ஆர்யன். அதற்கு காரணம் அவன் கையில் அப்படியான ஒரு கருவி இருக்கிறது. இதனை வேற்று கிரகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கும் ஏலியன், அதன் ஆபத்தை உணர்ந்து அந்த கருவியை கைப்பற்ற பூமிக்கு வருகிறது.
ஆர்யனுக்கும் ஏலியனுக்கும் நடக்க இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக இயற்கையின் மீது காதல் கொண்ட அர்ஜூன் ஏலியனுடன் கை கோர்க்கிறான். ஒரு கட்டத்தில் ஏலியனின் சக்தி அர்ஜூனுக்கு கை மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மீதிக் கதை! முதலில் இப்படிப்பட்ட ஒரு கதையை யோசித்து, அதனை முயற்சி செய்ய பார்த்து, அதில் பல்வேறு சிரமங்களை சந்தித்த போதும், முயற்சியை ஒரு போதும் கைவிடாமல் அதை திரைப்படமாக மாற்றி திரைக்கு கொண்டு வந்திருக்கும் படக்குழுவுக்கு பாராட்டுகள்.
அர்ஜுனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல காமெடி, ஆக்ஷன், எமோஷன் என எல்லா திசைகளிலும் சிக்சர் அடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதா பாத்திரத்திற்கு முடிந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டு இருக்கிறது. யோகி பாபுவின் கவுண்டர்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. வில்லனாக வரும் சரத் நடிப்பு அதகளம். படத்தில் இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்த போதும் படத்தை ஒட்டு மொத்தமாக ரசிக்க வைப்பது படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான். ஆம், ஒவ்வொரு சீனையும் சுவாரசியமாக மாற்ற அவர் எடுத்து இருக்கும் மெனக்கெடல் பாராட்டுக்கு உரியது.
படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள். அதனை ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது கிராஃபிக்ஸ் குழு. ஏலியனுக்கு பின்னணிப் குரலாக வந்திருக்கும் சித்தார்த்தின் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று உணர்த்தும் வகையில் படத்தில் இடம்பெற்று இருக்கும் வசனங்கள் ஒவ்வொன்றும் மனிதர்களின் மனதில் ஆழமாக இறங்க வேண்டியவை. ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இன்னும் அதிகமான உழைப்பை கொடுத்திருக்க வேண்டும்.