அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!
 
1

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்.

இது தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க கல்லூரி ஆகும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை ஆரம்பித்தது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின், 2024-2025ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு) – Bachelor of Visual Arts (Cinematography)

* இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை)– Bachelor of Visual Arts (Digital Intermediate)

* இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) – Bachelor of Visual Arts ( Audiography)

* இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்– Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

* இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு)- Bachelor of Visual Arts (Film Editing)

* இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்)- Bachelor of Visual Arts (Animation and Visual Effects) போன்ற பாட பிரிவுகள் உள்ளன.

எனவே, கலை ஆர்வம் மிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் தேதி: இதற்கான விண்ணப்பங்களை 02.05.2024 முதல் 20.05.2025 வரை http://www.tn.gov.in எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர். மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என நிர்வாகம் கூறியுள்ளது.

From Around the web