இம்சை அரசன் 24-ம் புலிகேசி பிரச்சினைக்குத் தீர்வு... விரைவில் படப்பிடிப்பு தொடங்குமா..?

 
1

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் அவரால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.

அதற்குப் பிறகு ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், முழுமையாக அவரால் திரையுலகில் கவனம் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், இம்சை அரசன் 24-ம் புலிகேசி விவகாரத்தில் சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள "எஸ்" பிக்சர்ஸ் ஷங்கர், "23-ஆம் புலிகேசி 2" திரைப்படத்தில் நடித்த நடிகர் வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ், நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

From Around the web