பவதாரணி குரலில்.. கனிமொழி கவிதை..!

 
1

எம்.பி கனிமொழி தான் எழுதிய அம்மாவின் வாசனை என்ற கவிதை குறித்த ஒரு உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தக் கவிதையை மறைந்த பாடகி பவதாரணி தானே இசையமைத்து பாடியும் உள்ளார். இன்னும் வெளி வராத அந்தப் பாடலை பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிட்டுள்ளார் கனிமொழி.

இத்தனை அழகான, அருமையான குரல் நம்மை விட்டுப் பிரிந்து விட்டதே என்று , இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொருவரும் கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த அளவுக்கு அற்புதமாக அதில் பாடியுள்ளார் பவதாரணி.

அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை

அது சந்தனம் இல்லை

ஜவ்வாதோ 

இப்போது அழகான புட்டிகளில் விற்கும் 

வாசனை திரவியமோ

எதைப் போலும் இல்லாத புது மணம்

அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை

சின்ன வயதில் 

அவளைக் கட்டிக்கொண்டு தூங்கிய போது

மெல்லியதாய் வந்து மூக்கை தழுவும்

அவள் அவிழ்த்துப் போட்ட சேலையை 

சுற்றிக் கொண்டு திரிந்த போது

அவளின் வாசனையை பூசிக்கொண்டதாய் தோன்றும்

முதல் மழையின் மண்வாடை போல் மூச்சு முட்ட

எடுத்து வைத்துக்கொள்ள தூண்டும்

அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை

எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு

மருந்தாய் மருந்தாய்

அவள் மடியில் தலை வைத்து

தூங்கிய போதெல்லாம்

பாதுகாப்பாய் எனை தாங்கிய மணம்

அவள் என்பதே அதுவும் சேர்ந்துதான்

வளர்ந்துவிட்ட மனதின் சுவர்கள்

அவளைக் கட்டிக்கொள்ள விடாத போதும்

ஆஹா ஹா ஹ மெத்தென்ற இதழாய் வருடிப்போகும்

தேவைகளின் தடம் பிடித்து தூரம் வந்துவிட்ட போதும்

எனக்கு மட்டுமே புரியும் அவளின் கருவறை மணத்தை

அள்ளி அள்ளி என் வீடெங்கும் தெளித்து

சுருண்டு படுத்து தூங்கிப்போக வேண்டும்

அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை

இது பவதாரணியின் குரலில் கனிமொழி எழுதிய கவிதை பாடல் வடிவில்..


 


 

From Around the web