லியோ டிக்கெட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..!

 
1

லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனிடையே திரைப்படம் வெளியாவதற்கு தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரசிகர் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கூடுதல் காட்சிகளை திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் திரையிட கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள், இப்படத்தினை திரையிடலாம். வருகிற 19-ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வழக்கமான 4 காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி குறித்த நேரத்திற்குள் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் திரையரங்குகளில் படம் திரையிடக்கூடாது.

திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடும் போது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை விதிகள் 1957 மற்றும் தமிழ்நாடு கேளிக்கை வழிச்சட்டம் 1939 விதிகளை விட கூடுதலாக வசூல் செய்தால் புகார் செய்யலாம். இது தொடர்பாக சிறப்பு கண்காணிப்பு குழு தலைவர்களை 9445000451, 9445000452 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் 04546-261093 என்ற தொலைபேசி எண், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் அந்தந்த பகுதிகளுக்கான வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டும் புகார் செய்யலாம். சுகாதாரக் குறைபாடு அல்லது கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web