அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை விடுத்த ராதிகா.. மீனா...

தமிழ் நடிகர், நடிகைகள் மீதும் அவதூறாக யூடியூப் சேனல்களில் பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதியிடம் நடிகை ராதிகா மற்றும் நடிகை மீனா கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தன்னை பற்றி அவதூறாகவும், தன்னுடைய பர்சனல் விஷயங்களை பற்றி மோசமாகவும் வீடியோவாக பதிவு செய்த யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை தெலுங்கு திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த செய்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவுக்கு நடிகை ராதிகா கமெண்ட் செய்து உள்ளார். அதில், ‘நடிகர் விஷ்ணு மஞ்சுவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், இதேபோல் தமிழ் நடிகர்கள் சங்கமும் விழித்துக் கொள்ள வேண்டும், தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று நினைத்துக் கொள்ளும் சிலர், பயனற்ற தகவல்களையும், திரையுலகினர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய பொய்களையும், மிகைப்படுத்திய செய்திகளையும் வெளியிட்டு தனிப்பட்ட ஒருவரின் குணாதிசயங்களை படுகொலை செய்து வருகின்றனர்.
கண்டிப்பாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், குறிப்பாக தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு நடிகை மீனா நடிகை, ’ராதிகா சொன்ன கருத்தை நான் ஆதரிக்கின்றேன், பொறுப்பேற்ற யூடியூபர்கள் மற்றும் சில வெறுப்பாளர்கள் வரம்பு மீறி சில விஷயங்களை கூறி வருகின்றனர். முட்டாள்தனமாக சில விஷயங்களை பரப்புகின்றனர், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர், குறிப்பாக பெண்களை மோசமாக தாக்குகின்றனர்.
எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிப்பட்ட நபர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்க கூடாது. இந்த யூடியூப் சேனல்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர வேண்டும்' என்று பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.