கடந்தாண்டை போலவே இந்தாண்டும் விலங்குகளை தத்தெடுக்கும் சிவகார்த்திகேயன்!

 
1

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்து 452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக இப்பூங்கா விலங்கு தத்தெடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்குக்கான ரசீது மற்றும் பூங்காவினை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பூங்காவிலுள்ள விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் 6 மாத காலத்திற்கு தத்தெடுப்பு செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது அவருடைய விலங்குகளின் மீதான அக்கறை மற்றும் ஆர்வத்தை அடையாளப்படுத்துகிறது. சிங்கம் மற்றும் யானையை தத்தெடுத்ததின் மூலமாக அவர் சிங்கங்கள் மற்றும் யானைகளின் பாதுகாப்பிற்காக பெரும் அளவில் குரல் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் அனு என்ற வெள்ளைப்புலியை 2018-2020 ஆண்டுகளில் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web