துளிர்க்கும் நம்பிக்கை- டாக்டர் படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

 
டாக்டர் படக்குழு

விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதால், சிவகார்த்திகேயனின் டாக்டர் படக்குழு முன்னதாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.

கோலமாவு கோகிலா, மான்ஸ்டர் படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் எடுத்து முடித்துள்ள படம் ‘டாக்டர்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படத்திற்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா...’ என்கிற பாடல் கடந்தாண்டே வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதனால் டாக்டர் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது.

கடந்தாண்டே இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா முதல் அலையினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, தியேட்டர்கள் இயங்குவதற்கு தடை உள்ளிட்ட காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

பிறகு இந்தாண்டு மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு எடுக்கப்பட்டது. சட்டசபை தேர்தல், அதை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற பிரச்னைகளால் டாக்டர் படத்தில் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக பிரபல ஒடிடி நிறுவனங்களுடன் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதனுடைய முடிவுகள் எதுவும் தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் விரைவில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளது, ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக டாக்டர் படத்தை ஓடிடியில் வெளியீடு செய்வதற்கான முடிவை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web