டிசம்பரில் துவங்கும் சூர்யா - பாலா - அதர்வா படம்..!

நடிகர் சூர்யா சொந்தமாக தயாரிக்கவுள்ள படத்தை பாலா இயக்குவதை தொடர்ந்து, வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் சினிமாவில் தேசிய விருது வென்ற இரண்டாவது இயக்குநர் பாலா. கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தை இயக்கினார். இது தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவானது.
ஆனால் சில பிரச்னைகளால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதனால் இயக்குநர் பாலாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இனிமேல் படங்களை அவர் இயக்கமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சூர்யா தயாரிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதை உறுதி செய்யும் விதமாக சூர்யா மற்றும் பாலா சந்திப்பு நடந்தது. இதன்மூலம் அவர் கூட்டணியில் படம் உருவாகவுள்ளது உறுதியானது.
மேலும் கதாநாயகனாக அதர்வா நடிப்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. டிசம்பரில் ஷூட்டிங் துவங்கப்பட்டு மூன்று மாதங்களில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.