தமிழில் தயாரான ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது..!!
முதுமலையில் யானைகள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தம்பதிகள் குறித்து எடுக்கப்பட்ட ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் தெலுங்கில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு.... நாட்டு...’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
அதேபோன்று முதுமலை காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை குறித்து எடுக்கப்பட்ட ‘THE ELEPHANT WHISPERES' என்ற படம் சிறந்த ஆவண குறும்படத்துக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தாயை பிரிந்த நிலையில் இருக்கும் பொம்மி மற்றும் ரகு என்கிற 2 குட்டி யானைகளை பொம்மன் - பெள்ளி தம்பதிகள் பராமரித்து வருகின்றனர். இதை பின்புலமாக வைத்து தான் ‘THE ELEPHANT WHISPERES' படம் தயாராகியுள்ளது.
And here comes the Oscar!! Many congratulations to team of #TheElephantWhispers for bringing home the honor. pic.twitter.com/YjEfxixSEh
— KhushbuSundar (@khushsundar) March 13, 2023
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘ஆஸ்கர் 2023-ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில்’, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பிரிவில் ‘THE ELEPHANT WHISPERES' படம் போட்டியிட்டது. முன்னதாகவே, பல திரை ஆர்வலர்கள் இப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும் என்று கணித்திருந்தனர்.
அது தற்போது உண்மையாகியுள்ளது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கொன்சாலவ்ஸ் மற்றும் தயாரித்த குனீத் மோங்கா, ஆஸ்கர் மேடையில் தோன்றி விருதை பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் நன்றி தெரிவித்த இயக்குநர் கார்த்திகி, இயற்கையுடன் இணைந்து வாழ்வது தான் மனிதம். புனிதமான பழங்குடி ஞானத்தைப் பகிர்ந்து கொண்டதற்காக யானை பராமரிப்பாளர்கள் பொம்மனுக்கும் பெள்ளிக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.