பயந்துகொண்டே பாராட்டிய அக்ஷய் குமார்- கங்கனா ரணாவத் வெளியிட்ட ரகசியம்..!
மூவி மாஃபியா கையில் சிக்கியுள்ள பாலிவுட் திரையுலகத்தில் தலைவி படத்திற்காக அக்ஷய் குமார் பயந்துகொண்டே தன்னை ரகசியமாக பாராட்டினார் என்று கங்கனா ரணாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பாலிவுட்டில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் தற்போது தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாராகியுள்ள ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, சமுத்திரகனி, நாசர், மதுபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 23-ம் தேதி தலைவி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதற்கு தேசியளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கங்கனா ரணாவத்தை ஓரம் கட்டிவிட்ட பாலிவுட் திரையுலகம் வழக்கம் போல, இந்த படத்தை ஒதுக்கி வைத்தே பார்த்தது. இதனால் கங்கனா மிகவும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
Bollywood is so hostile that even to praise me can get people in trouble,I have got many secret calls and messages even from big stars like @akshaykumar they praised @Thalaivithefilm trailer to sky but unlike Alia and Deepika films they can’t openly praise it. Movie mafia terror. https://t.co/MT91TvnbmR
— Kangana Ranaut (@KanganaTeam) April 7, 2021
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கனா, பாலிவுட் சினிமாவில் என் படங்களை பார்த்து பாராட்டி பேசுபவர்களுக்கு கூட சிக்கல் எழும். அதனால் தான் அக்ஷய் குமார் உள்ளிட்ட முக்கிய சில பிரபலங்கள் தலைவி டிரெய்லரை பார்த்து என்னை ரகசியமாக பாராட்டியுள்ளனர். இது மூவி மாஃபியா பயங்கரவாதம். கலையை கலையாக பார்க்க வேண்டும். அதைவிட்டு என்னுடைய அரசியல் பார்வை, ஆன்மீக நாட்டம் உள்ளிட்டவற்றை வைத்து என்னை துன்புறுத்தவும் தனிமைப்படுத்தவும் பார்க்கிறார்கள். அதற்கு நான் இலக்காக மாட்டேன். நான் வென்று வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.
கங்கனாவின் இந்த ட்வீட்டுக்கு ரசிகர்களிடையே விமர்சனும் வாழ்த்துக்களும் ஒருங்கே எழுந்துள்ளன. யார் என்ன சொன்னாலும் கங்கனாவை யாராலும் தடுக்க முடியாது என்று அவருடைய அபிமானிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலரோ தலைவி பட ப்ரோமோஷனுக்கு வேண்டி கங்கனா ட்விட்டரில் விளம்பரம் தேடுகிறார் என்று விமர்சனம் செய்துள்ளனர்.