வயலில் உழுது கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 9 வயது சிறுவன் பலி!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் (9). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முருகேசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரகாஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது வயலில் உழுவதற்காக டிராக்டரை எடுத்துச் சென்றார். அப்போது பிரகாஷ் தானும் வருவதாக கூறியதையடுத்து சிறுவனை ஏற்றிக் கொண்டு பக்கத்தில் உள்ள தனது வயலுக்கு சென்றார்.
வயலுக்கு சென்ற ராஜ்குமார் தனது அருகே பிரகாஷை உட்கார வைத்துக் கொண்டு உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரில் அமர்ந்து இருந்த பிரகாஷ் தவறி டிராக்டரின் சக்கரத்தில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.