மார்கழி மாதத்தின் சிறப்பு... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!

 
1

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என ஶ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும். இந்த மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர்.. தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம். எனவே மார்கழி என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது. மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்தது..!

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத் ‘தனுர் மாதம்’ எனவும் அழைப்பர். இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது மக்களின் வழக்கம். ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப் பக்தர்கள் இம்மாதத்தில் மேற்கொள்ளுகின்றனர்.

Kolam

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் ‘என்றும் பதினாறு வயது’ எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மிருத்யுஞ்ச ஹோமம் (யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை

  • மார்கழி அதிகாலையிலேயே எழுந்து விடவேண்டும்.
  • வீட்டை சுத்தம் செய்து, குளித்து, கோலமிட்டு, திருப்பாவை, திருவெண்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.
  • மார்கழி மாதம் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
  • மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் அழகான வண்ணக் கோலங்கள் போட வேண்டும்.
  • ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும்.
  • அதிகாலையில் எழுந்து விளக்கேற்றி இறைவனை வழிபட மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

Margazhi

மார்கழி மாதத்தில் செய்யக்கூடாதவை

  • மார்கழி மாதத்தில் விதை விதைக்க கூடாது. ஏனெனில் விதைகள் சரியாக முளைக்காது.
  • மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.
  • மார்கழி மாதம் விரதம் மேற்கொள்ளும் கன்னிப்பெண்கள் நெய், பால் சேர்த்த உணவைச் சாப்பிடக்கூடாது.

From Around the web